இந்திய இணைய வாசிகளுக்கு மகிழ்ச்சி அளிக்கும் செய்தி
இந்திய இணைய வாசிகளுக்கு மகிழ்ச்சி அளிக்கும் செய்தியாக நம் நாட்டிலேயே தயாரான இந்திய பிரவுசர் அறிமுகமாகி இருக்கிறது. .
எபிக் பிரவுசர் எனும் பெயரில் உருவாக்கப்பட்டுள்ள இந்த பிரவுசர் ஒபன் சோர்ஸ் தொழில்நுட்பம் சார்ந்த மோசில்லா மென்பொருளை அடிப்படையாக கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.
பெங்களூரைச் சேர்ந்த ஹிடன் ரிப்ளக்ஸ் எனும் நிறுவனம் இந்த பிரவுசரை உருவாக்கி உள்ளது. அமெரிக்காவில் சென்று ஐடி நிறுவனத்தில் பணியாற்றி திரும்பிய அலோக் பரத்வாஜ் எனும் சாப்ட்வேர் நிபுணர் இந்த நிறுவனத்தை நடத்தி வருகிறார்.
ஏற்கனவே இணைய உலகில் பாடு ஓட்டர்ஸ் எனும் இணைய தளத்தை நடத்தி புகழ்பெற்றவர் இவர். தேஜஸ் வியாஸ் உள்ளிட்ட தனது நண்பர்களோடு இணைந்து இந்த நிறுவனத்தை அலோக் நடத்தி வருகிறார். இந்நிறுவனம் இந்தியர்களுக்கென்று ஒரு தனி பிரவுசர் தேவை என்பதை உணர்ந்து எபிக் பிரவுசரை வடிவமைத்துள்ளது.
புகழ் பெற்ற எக்ஸ்புளோரர், ஓபரா, கூகுலின் குரோம், மோசில்லாவின் பயர்பாக்ஸ் என பல பிரவுசர்கள் இருந்தாலும் தனித்துவமான பல அம்சங்களோடு இந்தியர்களுக்கென்று எபிக் பிரவுசர் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்தியாவுக்கான முதல் பிரவுசர் என்று பெருமிதம் கொள்ளும் இந்நிறுவனம் உலகிலேயே வைரஸ் எதிர்ப்பு மென்பொருளை கொண்ட முதல் பிரவுசர் இது என்றும் கூறுகிறது. எனவே இந்த பிரவுசரை பயன்படுத்தினால் வைரஸ் தொல்லை பற்றிய கவலை இல்லாமல் இருக்கலாம் என எதிர்பார்க்கலாம்.
அதோடு ஆபத்தான தளங்கள் பற்றிய எச்சரிக்கையும் இந்த பிரவுசரிலேயே கிடைக்கும். இணைய தளங்கள் மூலம் நடத்தப்படும் பல்வேறு வகையான பிஷ்ஷிங் மோசடி குறித்தும் இந்த தளம் இணையவாசிகளை எச்சரிக்கை செய்தவண்ணம் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Download As PDF

